பதற்றம் நீடிப்பு – கத்தார் பேச்சிலும் முன்னேற்றம் இல்லை

ஈரானும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு சுற்றை புதன்கிழமை அன்று நிறைவு செய்தன. எனினும்,நீடித்த அமைதியை நோக்கி அவர்கள் முன்னேற்றம் கண்டதற்கான எந்தவொரு அறிகுறியும் இதில் தென்படவில்லை.

மாறாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு இடைக்கால ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது ஏற்கனவே தீர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட பிரச்சினைகள் குறித்தே இரு தரப்பும் மீண்டும் கவனம் செலுத்தின.

இரு நாடுகளின் பேச்சுவார்த்தையாளர்கள் தோஹாவில் (Doha) இரண்டு நாட்கள் தங்கி, ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்து மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பது குறித்து விவாதித்ததாகத் தெரிவித்தனர்.

தொடக்கக்கால ஒப்பந்தத்தின் கீழ் இவை இரண்டும் மிக முக்கியமான பிரச்சினைகளாகும்.

அடுத்த கூட்டம், ஜூலை 9 அன்று அடக்கம் செய்யப்படவிருக்கும் ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதி ஊர்வல சடங்குகளுக்குப் பிறகு நடைபெறும் என்று கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் போரை நிறுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளில் தோஹா விவாதங்கள் “நேர்மறையான முன்னேற்றத்தை” ஏற்படுத்தியுள்ளன என்றும், சுவிட்சர்லாந்தில் நடந்த உச்சிமாநாட்டின் “முடிவுகளின் அடிப்படையில் இவை கட்டமைக்கப்படுகின்றன” என்றும் கத்தாரிய அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாஷிங்டனில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கான சாத்தியமான வரம்புகள் குறித்து இரு தரப்பும் முன்னேற்றம் கண்டு வருவதாகக் கூறினார் .

கடந்த பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து அவர் போரைத் தொடங்கியதற்கான முக்கிய காரணமே இந்த அணுசக்தித் திட்டம்தான். “ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை நன்றாக நகர்ந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“அவர்கள் மிகச் சிறந்த கூட்டங்களை நடத்தியுள்ளனர், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்றார்.

ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அமைந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சு எதுவும் எழவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Articles

Latest Articles