மின்சக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: சஜித் அணி தகவல்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது.

அவ்வேளையில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த கெஹலியவை ஆதரிப்பது தவறு, மனசாட்சியின் பிரகாரம் மொட்டு கட்சியினர் வாக்களிக்க வேண்டும் என ஜே.வி.பி. கோரி இருந்தது.

எனவே, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அமைச்சர் குமார ஜயகொடி விடயத்திலும் ஜே.வி.பியினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்.

நாம் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவோம். எம்.பிக்களின் கையொப்பம் திரட்டிய பின்னர் அது சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles