சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார்.
இன்று (11) பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
நாம் அனுபவித்த துன்பங்களை நமது பிள்ளைகள் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
இந்த வேலைத்திட்டத்தின்போது பொறுமையாக காத்திருக்க யாருக்கும் நியாயமான உரிமை இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இவ்விடயத்தில் தன்னைப் பற்றி தான் உறுதியளிப்பதாகவும்,மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என்ற வகையில் அனைவருக்கும் உள்ள பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய அளவிலான அரசியல் தலைமை, செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு பரந்த பிரச்சாரத்தின் ஊடாக சமூகத்தில் இந்த அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வலையமைப்பை அகற்றவும், புனர்வாழ்வு வாய்ப்புகளை வலுப்படுத்தவும், போதைப்பொருள் பயன்பாட்டைக் கைவிட விரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் பரவலான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் அந்த மக்களை அதிலிருந்து விடுவித்து அவர்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மாகாண வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 91,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதோடு,1818 சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவுகளின் பேரில் நீண்டகால விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 1566 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இக்குறுகிய காலத்தில் இலங்கை பொலிஸார் ஆற்றிய தீவிர பங்களிப்புக்காக நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றிய 62 பொலிஸ் அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதியின் கைகளினால் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க:
” இங்குள்ள அனைவரும் பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்கள்.நாம் எத்தகையை தொழிலில் ஈடுபபட்டாலும் அனைவருக்கும் நாட்டைப்பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்பு உள்ளது. அது என்ன? இருப்பதை விட சிறந்த நாடாக மாற்ற வேண்டும்.
எமது பிள்ளைகளுக்கு இதனை விட சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இது தான் எம் அனைவருக்கும் உள்ள எதிர்பார்ப்பாகும். அந்தப் பயணத்தில் நாம் பல துறைகளில் வெற்றிகளை ஈட்ட வேண்டும். பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். எமக்கு எவ்வாறான பொருளாதாரம் உரித்தானது என்று அனைவரும் அறிவோம்.
30 வருடங்களாக யுத்தத்தினால் தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக கூறினோம். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்னர் நாடு வங்குரோத்து அடைந்தது. உண்மையான காரணம் யுத்தமல்ல. நாம் பின்பற்றிய பொருளாதார கொள்கையும் மோசடிகளும் லஞ்ச ஊழல்களும் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாக அமைந்தன. அவ்வப்போது பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்களை கூற முயன்றோம்.
எமது பொருளாதார பின்னடைவுகளை பல்வேறு காரணங்கள் காட்டினோம். சிலவேளை யுத்தத்தையும் சிலவேளை இயற்கை அனர்த்தங்களையும் தொற்றுநோய்களையும் காரணங்காட்டினார்கள்.
வீழ்ச்சிகளுக்கு காரணம் தேடினார்கள். ஆனால் எந்த நிலைமைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய பொருளாதரத்தை உருவாக்க வேண்டும்.
கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்தம் வெடிக்கும் நிலை ஏற்பட்ட போது எமது நாடு வீழ்ச்சியடையும் என கருதினார்கள். மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்ட போது எமது நாடு வீழும் என நினைத்தார்கள். அமெரிக்கா எமது நாட்டுக்கு வரிவிதித்த போது நாடு வீழ்ச்சியடையும் என்றார்கள்.
டித்வா சூறாவளி ஏற்பட்ட போது எமது நாடு சரிவடையும் என்று கருதினார்கள். அவ்வாறான எந்தவொரு நிலைமையிலும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் நாம் பணியாற்றுகிறோம்.
டித்வா சூறாவளி நிலைமையில் நாடு பின்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பலமாக முன்னோக்கிச் செல்லும் வகையில் நிதி ஒழுங்கையும் பொருளாதாரத்தையும் தயார்படுத்தினோம். உலக வங்கி அறிவித்துள்ளவாறு 4.1 பில்லியன் டொலர் என கணிப்பிடப்பட்டுள்ளது. 1.2 டிரில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது எமது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் சுமார் 4% ஆகும். எமது பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கம் ஏற்படாத வகையில் ஏற்பட்ட சேதத்தை தாங்கிக் கொள்ளும் வகையிலான பொருளாதாரத்தை நாம் உருவாக்கினோம். 50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை இந்த டித்வா சூறாவளி அனர்த்தத்தில் இருந்து மீள்வதற்காக ஒதுக்கினோம். அதற்காக ஒரு சதம்
கூட கடன் வாங்கவில்லை. பணம் அச்சிடவில்லை.எமது திறைசேரிக் கணக்கில் 120 000 கோடி பணம் இருந்தது. அதில் 50 000 கோடியை இதற்காக ஒதுக்கினோம்.
நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். பலமான பொருளாதாரத்தை நோக்கிய திசைக்கு செல்கிறோம்.
அடுத்ததாக எமது நாட்டில் பலமான வெளிநாட்டுக் கொள்கைக்குப் பிரவேசிக்க வேண்டும். உலகில் வெளிப்படையாக அமைதியாக இருப்பது போல தோன்றினாலும் உள்ளுக்குள் மோதலுடன் கூடிய உலகமே காணப்படுகிறது. வர்த்தக சந்தையை பகிர்வதில் யுத்தம் நடைபெறுகிறது. இந்த மோதல் நிறைந்த உலகில் எமது நிலைகளை பாதுகாத்து எந்தத் தரப்பின் பக்கமும் சாயாது
சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இது எமது நாட்டை கட்டியெழுப்புவதில் முக்கியமான காரணியாகும்.
எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான அரச சேவை அவசியம். முன்னேற்றகரமான மற்றும் பலமான அரச சேவையை உருவாக்க அயராது பாடுபடுவோம். டிஜிட்டல்மயமாக்கல், அரச தேவைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல்,வாகனங்கள் வழங்கி சிறந்த அரச சேவையை உருவாக்க வேண்டும். அரச சேவையை ஈர்ப்புள்ள இடமாக மாற்ற வேண்டும்.

2025 இல் அரச சேவை சம்பளத்தை உயர்த்துவதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாவை ஒதுக்கினோம். 2026 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்குவதற்காக மேலும் 11 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். சம்பள உயர்வின் மூன்றாம் கட்டத்திற்காக 2027 இல் மேலும் 11 ஆயிரம் கோடி செலவாகும். சம்பள உயர்விற்காக மாத்திரம் 33 ஆயிரம் கோடி செலவிட வேண்டும்.அரச சேவையை ஈர்ப்புள்ள இடமாகவும் அரச சேவைக்கு திருப்தியான வாழ்வையும் வழங்கும் நோக்கம் எமக்குள்ளது.
மாவட்ட செயலாளர் முதல் கிராம அலுவலர் வரையான அரச பொறிமுறையானது எமது நாட்டின் இருப்பின் முக்கியமான காரணியாகும். பொலிஸ் , முப்படை என்பன எமது நாட்டின் இருப்பின் பிரதானமானவையாகும். உங்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினை இருப்பதை நாம் அறிவோம். இராணுவத்திலுள்ளோரின் உணவு கூப்பன் தொடர்பான பிரச்சினை, பொலிஸாரின் இடர் கொடுப்பனவு என்பன தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். எமக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள். 2027 மூன்றாவது சம்பள உயர்வை வழங்கிய பின்னர் வரவு செலவுத்திட்ட செலவுகள் குறித்து கவனம் செலுத்தி எஞ்சிய கொடுப்பனவுகள் தொடர்பில் ஆராய்வோம். நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான அரச பொறிமுறை அவசியம்.
அடுத்து சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பிரஜையொருவருக்கு அநீதி நடந்தால் அவர் எங்கு செல்ல வேண்டும். அவர் பொலிஸிற்குச் செல்வார். தனக்கு நடந்த அநீதிக்கு அவர் நீதியை எதிர்பார்ப்பார். அவர் நீதிமன்றத்தை நாடுவார். அநீதிக்கு நீதியை எதிர்பார்ப்பார்.
அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் இது மிகவும் அத்தியாவசியமானது. எனவே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம். சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சட்டம் சிலந்திவலையைப் போன்றது என்பார்கள். சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும் பெரியவை தப்பித்துக் கொள்ளும் என்பார்கள்.
இவ்வாறு தான் பொதுமக்கள் மத்தியில் சட்டம் தொடர்பான நம்பிக்கை காணப்படுகிறது. ஆனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். ஒருவருக்குள்ள அதிகாரம் ,செல்வம் என்பவற்றினால் சட்டத்தில் இருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கக் கூடாது. பணம்,அதிகாரம் இருந்தால் மட்டுமன்றி நியாயமாக சட்டம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு எழவேண்டும்.
சட்டம் தன்னிடம் வர முடியாது.தன்னிடம் அதிகார வளையம் இருக்கிறது என சட்டத்தை புறக்கணிக்கும் சிலர் இருந்தார்கள். அவ்வாறான நாட்டினால் முன்னோக்கிச் செல்ல முடியாது. அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சட்டத்திற்க அஞ்ச வேண்டும். அந்த நிலை எமது நாட்டில் இல்லை.
2026 ஆம் ஆண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர்கொடுக்கும் வருடமாக இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்.அனைவரும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் முன்னேறியது கிடையாது.
சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகளின் அதிகாரம் மேலோங்கியிருக்கும்.சட்டம் இல்லாத இடத்தில் குற்றவாளிகள் உச்சத்தில் இருப்பார்கள். இது தான் நிஜம். அவ்வாறான நாட்டினால் முன்னேற முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திய நாட்டை உருவாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,அமைச்சின் செயலாளர், பொலிஸ் மாஅதிபர்,முப்படை அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். கருப்பு நாடுகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.
சட்டத்தின் வீழ்ச்சியே அந்த நாடுகளில் காணப்படுகின்றன. சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகள் நீச்சலடிப்பார்கள்.சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் நாட்டை நாம் உருவாக்குவோம். எமக்கு எவ்வாறான நாடு தேவை. நாம் பெற்ற துன்பங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது. நாம் எதிர்கொண்ட சவால்களை எமது பிள்ளைகளும் முகங்கொடுக்காத நாடு அவசியம்.

இதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான சவால் எமது பிள்ளைகள் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பதாகும். நான் முன்பு குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவை என்ற போதும் அவை அனைத்தையும் வெற்றி கொண்டாலும் பயனிருக்காது. கிராமங்கள் தோரும்
இந்தப் போதைப் பொருள் வியாபித்துள்ளது. ஹெரோயின் தூரப் பகுதிகளில் இருந்து பிடிபட்டுள்ளன.
போதைப் பொருளுக்கு அடிமையாவதில் முதலில் அந்தப் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்து தாய் தந்தையர்கள் பலியாகின்றனர். அடுத்து அவரின் குடும்பம். போதைப் பொருளுக்க அடிமையானவரின் குடும்பமானது முழு ஊருமே நிராகரிக்கும் குடும்பமாகிறது. அந்தப் பெற்றோரின் எதிர்பார்ப்பு முழுமையாக வீழ்ச்சியடைகிறது.குழந்தை பிறக்கும் போதே அந்த பேற்றோருக்கு பாரிய எதிர்பார்ப்பு இருக்கும். பிள்ளை போதைப் பொருளுக்கு அடிமையாகாத சமூகத்தினால் புறக்கணிக்கப்படாத நபராக இருப்பார் என்று,
சகோதரியினால் திருமணம் செய்து கொள்ள முடியாது. முழுக் குடும்பமும் பாதிக்கப்படும். கிராம மக்களும் அச்சமடைவர். பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். முழு சமூகமும் பாதிக்கப்படும். எனவே நாம் என்ன செய்ய வேண்டும். எந்த பிள்ளையும் இந்த அச்சுறுதலுக்கு பலியாகாத சமூகத்தை உருவாக்க வேண்டும். எந்தவொரு தாயோ குடும்பமோ பாதிக்கப்படாத சமூகத்தை உருவாக்க வேண்டும். இந்த அச்சுறுத்தல் இதனோடு நின்றுவிடாது.
அண்மைக் காலத்தில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. இந்த துப்பாக்கி சூடுகளின் முழுமையான பின்னணி என்ன? போதைப் பொருள் சந்தையை பகிர்ந்து கொள்வதற்கான மோதலே உள்ளது. மாத்தறையில் போதைப் பொருள் வர்த்தகம் செய்பவர் களுத்துறைக்கு வந்தால் அங்கு தாக்கப்படுவார். களுத்துறை நபர் கம்பஹவிற்கு சென்றால் அங்கு தாக்கப்படுவார்.
இவ்வாறான சட்டவிரோத ஆயுதக் குழுக்கள் உருவாக இந்த போதைப் பொருள் காரணமாக அமைந்துள்ளது. எனவே எமது பிள்ளைகள் சட்டவிரோதமான ஆயுதங்களை கையாளும் நிலை உருவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்துவோர் 20-30 வயதுடையோர். அவர்கள் ஆயுதக் குழுக்களின் அங்கத்தவர்களாக மாறியுள்ளனர். அவர்கள் பெருமளவு பணத்தை திரட்டுகின்றனர்.
பொதுவாக குடு , ஹெரோயின் ஒரு கிலோ ஒன்றரை கோடியாகிறது. 200-300 கிலோ ஹெரோயின் பிடிபடுவதை நீங்கள் அறிவீர்கள். 200 கிலோவின் பெறுமதி எவ்வளவு இருக்கும்? 300 கோடி ரூபா பெறுமதியாகிறது. இந்த வலையமைப்புடன் எந்தளவு பணம் புலங்குகிறது என்று தெரிகிறதா?
அண்மையில் 2100 கிலோ கிராம் பிடிபட்டது. 3000 கோடி பெறுமதியுடையது. இந்த பணத்தினால் என்ன செய்கிறார்கள். இந்தப் பணம் அரச பொறிமுறைக்குள் நுழைகிறது. சில பலவீனமான அதிகாரிகள் அந்தப் பணத்திற்கு விலைபோகின்றனர்.
பல இலட்சம் செலவிட்டு திருட்டுத்தனமாக கடவுச் சீட்டு தயார் செய்கிறார்கள். பல இலட்சம் செலவிட்டு திருட்டுத் தனமாக வாகனத்தை பதிவு செய்கின்றனர். இலட்சங்களை செலவிட்டு
சட்டத்தில் இருந்து தப்ப முயல்கிறார்கள். இறுதியில், இந்தப் பணத்தினால் என்ன நடக்கிறது? அரச பொறிமுறையை சீர்குலைக்கிறது.
அது அத்துடன் நின்றுவிடுவதில்லை. அவர்கள் அரசியலுக்குள்ளும் நுழையத் தொடங்குகிறார்கள். சில பிரதேச சபைத் தலைவர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் அந்தப் பணத்தைச் செலவிட்டு கட்சிகளை உருவாக்குகிறார்கள். பிரதேச சபை , மாகாண சபை,பாராளுமன்ற அதிகாரம் அந்த போதைப் பொருளுடன் தொடர்புள்ள வலையமைப்புகளுக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பொறிமுறை எந்தளவு அழிவு வரை செல்கிறது என்பதை உணர வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களுக்குப் பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இன்னும் சில காலம் செல்லும்போது, போதைப்பொருள் வர்த்தகர்களே அரசியல்வாதிகளாக மாறிவிடுவார்கள்.
கட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே பல பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. அவர்கள் பிரதிநிதித்துவப்படுவதை அறிவோம். இதனை இவ்வாறு வளர விட முடியாது.
ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கும், உங்கள் அனைவருக்கும் ‘நடப்பது நடக்கட்டும்’ என்று ஒதுங்கி இருக்க முடியும். எமது பிள்ளை இன்னும் பாதிக்கப்படவில்லை தானே என இருந்து விடலாம். எமது வீட்டில் இந்தப் பிரச்சினை இல்லையென கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இந்த அழிவு ஒரு கிராமத்தையோ, வீட்டையோ, குடும்பத்தையோ விட்டுவைக்காமல் தேசிய அளவில் பரவும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அப்படியாயின் நாம் என்ன செய்யவேண்டும்.
கண்டு கொள்ளாமல் இருப்பதா? அல்லது மோத வேண்டுமா? ஒதுங்கி நிற்பதற்கு நம் எவருக்கும் நியாயமான உரிமை கிடையாது. எனவே, இதனைத் தோற்கடிக்க நாம் அனைவரினதும் தலையீடு அவசியம். என்னைப் பற்றி என்னால் உறுதியளிக்க முடியும். அதேபோல் எமது அரசாங்கம் இது குறித்து ஏகோபித்த, பின்வாங்காத தீர்மானத்தில் இருக்கிறது.
எமது அரச அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் என நாம் அனைவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர் மறைந்திருப்பவர் அல்ல, அவர்கள் இனி சமூகத்தில் ஒளிந்திருக்கவில்லை. ஆனால், அவர்கள் சமூகத்தைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் எமது சிறைச்சாலை அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.அண்மையில் குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்கையில் நான் சுதந்திரமான மனிதன் என்று அவர் சொன்னார். அவர் அந்த சமயம் தடுப்புக் காவலில் இருந்தார். தன்னை சிறையில் அடைப்பதால் தான் சுதந்திரமான மனிதன் என அவர் நினைக்கிறார். அவருக்கு சிறையில் சுதந்திரமாக இருக்க முடிகிறது . பல தடவைகள் சிறைக் கூடங்களில் சோதனை செய்தோம்.பல தடவைகள் கைபேசிகள் பிடிபட்டன. தொடர்புகள் இருப்பதாக தகவல் கிடைத்தன.இவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.
ஜனநாயகம், மனித உரிமைகள் இவை அனைத்தையும் நாம் மதிக்கிறோம். இவை அனைத்திற்கும் மேலாக மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நாம் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே, அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க நாம் தயாராக உள்ளோம். இதனை தொடர்ந்து முன்னெடுக்க எமக்கு பொதுமக்களின் ஆதரவு அவசியம்.
நாடு முழுவதும் கிராம அலுவலகர் மட்டத்தில் ‘பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களை’ ஆரம்பித்துள்ளோம். கிராமத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இதற்குப் பலியாவது எமது பிள்ளைகள் தான். எவரும் பிறக்கும்போது போதைப்பொருளுக்கு அடிமையாகும் தேவையுடன் பிறப்பதில்லை. அவர் போதைக்கு அடிமையாவதை தடுக்க சமூகம் தவறிவிட்டது. சட்டத்தை பாதுகாக்கும் நிறுவனங்கள் போதைப் பொருட்கள் கிடைக்கும் வழிகளை தடுக்க தவறிவிட்டன.மதத்தலைவர் ,பிக்குமார், மௌலவிமார் ,குருக்கல் வழங்கும் போதனைகள் இந்த அச்சுறுத்தலுக்கு அடிமையாவதைத் தடுக்க போதுமானதாக இருக்கவில்லை. எனவே, இதற்கு அடிமையாவது அந்த இளைஞனுடைய தவறு மாத்திரம் தானா.
நம் அனைவருக்கும் கைவிட முடியாத ஒரு பொறுப்பு இருக்கிறது. அவருக்கு போதைப் பொருள் கிடைக்கும் வழியை தடுக்க பொலிஸினால் முடியவில்லை. எமது மதம் எமது போதனைகளினால் அவர்கள் பலியாவதை தடுக்க முடியவில்லை. எமது சமூகமும் தவறிவிட்டது. அப்படியாயின் போதைக்கு அடிமையானவர் மீது விரல் நீட்டுவதைப் போன்றே எமக்கும் பொறுப்பிருப்பதை உணர வேண்டும்.
இதில் இருந்து மீள்வதற்கான வழி என்ன? நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தயாராக வேண்டும். அரசியல் அதிகார பீடமாக நாமும், பொலிஸார், முப்படையினர் என நாம் அனைவரும் ஒரே சக்தியாக இதற்கு எதிராக அணிதிரள வேண்டும். அரச அலுவலகங்களில் இந்த அச்சுறுத்தலை நீக்குவதற்கு திட்டம் தயாரித்துள்ளோம். இந்த அச்சுறுத்தல் பல இடங்களில் பரவியுள்ளன. கிராமம் கிராமமாக இதனை ஒழிக்க வேண்டும். சில காலத்தினுள் இதனை சாதிக்க முடியும் என நான் கருதவில்லை. இதற்கு சில வருடங்கள் நீடிக்கக்கூடிய, பின்வாங்காத நீண்டகால வேலைத்திட்டம் அவசியம். போதைப்பொருள் நாட்டிற்குள் வரும் வழிகளை நாம் முடக்க வேண்டும். அதற்காக குறிப்பாக கடற்படையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.அண்மையில் கடற்பரப்பில் பாரியளவு போதைப் பொருட்களை கடற்படை கைப்பற்றியது. அதேபோல் நிலப்பரப்பில் விநியோகிக்கப்படும் வலையமைப்பை முடக்குவோம். அதற்காக எமது பொலிஸார் அதிரடிப்படையுடன் இணைந்து சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பாரிய பணியை ஆற்றி வருகின்றனர்.இதனுடன் தொடர்புள்ள குற்றவாளிக் குழுக்களை கைது செய்ய வேண்டும். பலர் கைதாகியுள்ளனர். பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கைது செய்யவேண்டும். அதேபோல், இதனால் பாதிக்கப்பட்டவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாடு முழுவதும் புனர்வாழ்வு நிலையங்களை அமைப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. எமது மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் அனைவரையும் இணைந்து ஒரு தேசிய சபை நிறுவப்பட்டுள்ளது. அதில் பரந்தளவில் ஆராயப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு மீண்டும் அவரது வாழ்வை பெற்றுக்கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
உங்கள் உறவினர் ஒருவர் அடிமையான குடும்பத்திற்குச் சென்று பாருங்கள். நண்பரின் வீட்டுக்குச் சென்று பாருங்கள். தற்பொழுது அடிமையானவரை புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் வாழும் நாம், இந்த பேரழிவு குறித்து நன்கு அறிந்துள்ள நாம், இதிலிருந்து எமது பிள்ளைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நாம் முன்வராவிட்டால், வேறு யார் முன்வருவார்கள்? இதனை நாமே செய்ய வேண்டும். எனவே, நாம் ஒன்றிணைந்து இந்தப் பேரழிவைத் தோற்கடிப்போம்.
இதில் எமது மகா சங்கத்தினருக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். உங்களது போதனைகளில் ஒரு 5-10 நிமிடங்கள் இந்தப் பேரழிவு குறித்து சமூகத்திற்கு ஒரு செய்தியை வழங்கினால், எம்மால் ஒரு பாரிய சமூகக் கருத்தை கட்டியெழுப்ப முடியும். பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் இந்தச் செய்தியை சமூகத்திற்குக் கொண்டு சென்றால், இதனை ஒரு சமூக நிலைப்பாடாக மாற்ற முடியும். எனவே, இது அரசாங்கம், பொலிஸ், இராணுவம் ஆகியவற்றின் பணி மாத்திரமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினதும் பணியாக மாற வேண்டும். எம்மால் இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எனவே, ஒதுங்கி நிற்காமல் இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க முன்வருமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை முழுமையாக நீக்கிய அரசாங்கம் நாம். இந்தப் பணியைச் செய்வதற்கு பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் நாம் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். எமக்குக் காப்பாற்றுவதற்கு போதைப்பொருள் வியாபாரிகளோ கடத்தல்காரர்களோ எவரும் இல்லை. எனவே, உங்களது தொழில்முறை கௌரவம், பதவியின் பொறுப்பு மற்றும் உங்களது கடமையை நிறைவேற்ற முன்வாருங்கள். அதற்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் நாம் பெற்றுத் தருவோம்’’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.










