பாகிஸ்தானில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு: நெஞ்சை உலுக்கும் சோகம்

பாகிஸ்தானின் கிழக்கு நகரான லாகூரில் செவ்வாய்க்கிழமை தனியார் பயிற்சி நிலையமொன்றின் (Tutoring Centre) ஒ கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சாத்தியமான பாதுகாப்பு அலட்சியம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பஞ்சாப் மாகாண அவசரக்கால சேவையின் தகவல்படி, இடிபாடுகளுக்கு இடையே இருந்து சிறுவர்களையும் 30 வயதுடைய பெண் ஆசிரியை ஒருவரையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்கள் 5 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் 9 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மையம் பதிவு செய்யப்படாமல், ஒரு தனியார் குடியிருப்பு கட்டிடத்தின் சேதமடைந்த கூரையின் கீழ் இயங்கி வந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் காட்டுவதாக பஞ்சாப் மாகாண தகவல் அமைச்சர் அஸ்மா பொகாரி (Azma Bokhari) தெரிவித்துள்ளார்.

வழக்கமான பள்ளி நேரத்திற்கு வெளியே கூடுதல் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக இத்தகைய மையங்கள் பாகிஸ்தான் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன.

“அலட்சியம், கவனக்குறைவு அல்லது ஏதேனும் சட்ட மீறல் கண்டறியப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்,” என்று பொகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கூரை இடிந்து விழுந்த சமயத்தில், கட்டிடத்தின் ஓடுகளை (Tiles) பழுதுபார்க்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக (AFP) செய்தி நிறுவனத்திடம் நேரில் பார்த்தவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த பேரழிவு குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண காவல்துறை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles