கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கொலம்பியாவின் தலைநகர் போகொட்டாவிலிருந்து (Bogota) மேற்கே சுமார் 400 கிலோமீட்டர் (250 மைல்) தொலைவில் உள்ள சொக்கோ (Choco) மண்டலத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose del Palmar) நகராட்சிக்கு அருகே திங்கள்கிழமை இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பிய புவியியல் சேவை மையம் ஆகியவை தெரிவித்துள்ளன.

ஆரம்பத்தில் இதன் அளவை கொலம்பியா 6.6 ரிக்டர் எனக் கணித்திருந்தது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 107 கிலோமீட்டர் (66 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தை அவசரக்கால மீட்புக் குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கொலம்பியா மற்றும் ஈக்வடார் நாட்டு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தலைநகர் போகொட்டாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்களின் அவசரகால எச்சரிக்கை மணிகளும் கார்களின் அலாரங்களும் ஒலிக்கத் தொடங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தின் காரணமாக பெரேரா நகரில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், மானிசாலேஸ் நகரில் இருவர் உயிரிழந்துள்ளதாக ‘அசோசியேட்டட் பிரஸ்’ (AP) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதியில் வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமானதும் குறிப்பிடத்தக்கது.

அந்த சோகத்தின் வடு மாறுவதற்குள், தற்போது கொலம்பியாவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles