2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்தின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உள்ள ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் இந்த நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சுடரேற்றப்பட்டு, உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வின் போது யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட்டால் அஞ்சலி உரை வழங்கப்பட்டது. அத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரினைப் பகிர்ந்து கொண்ட அவர், நீதிக்கான பிரார்த்தனைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இறைமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
