டி.சந்ரு
நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் நபரொருவருக்கு துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக, நுவரெலியா காவல்துறையினரால் நேற்று (21) இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி புஷ்பிக ஜெயதாச முன் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரை ரூ. 10 லட்சம் தனிநபர் பிணையிலும், ரூ. 25,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் , இந்த வழக்கு செப்டம்பர் மாதம் (14)ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.
அதுவரை துப்பாக்கியை வழக்குப் பொருளாக நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் .அத்துடன் சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டார்.










