இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார்.
விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.
இலங்கை விமானப்படையின் 75 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்ப அரங்குகளையும் இது கொண்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் விமானங்களை மிக அருகில் சென்று பார்க்கவும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி அறியவும் இது வாய்ப்பை வழங்குவதுடன், விமானப்படையின் அனைத்து தொழில்முறையிலான தனித்தனி அரங்குகள் மற்றும் வான்வழிப் பறப்பிற்காக ஏராளமான இலங்கை விமானப்படை விமானங்கள் மற்றும் சிவில் விமானங்கள் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், விமானப்படை ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் வான்வழி சாகசங்கள், இரவு நேர ட்ரோன் காட்சிகள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள், விமானப்படை விசேட பிரிவினால் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு காட்சிகள், பரிசூட் காட்சிகள் மற்றும் அங்கம்பொர சண்டை காட்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகளை இன்று (06) முதல் மார்ச் 08 வரை, தினமும் பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.










