மாகாணசபைத் தேர்தல் தொடர்பான ரில்வின் சில்வாவின் கருத்து முறையற்றது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் கூறியவை வருமாறு ,
” 2025 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார்.
2025 முடியாது 2026 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதாக பின்னர் குறிப்பிட்டார்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற நிலையில் மக்கள விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வடக்குக்குச் சென்று இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு என்றால் மாகாணசபைத் தேர்தல் கடந்த ஆண்டும் இல்லை, இந்த ஆண்டும் இல்லை. மாகாணசபைத் தேர்தலை ஒருவருட காலத்துக்குள் நடத்துவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறியுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். தேர்தலை நடத்துவதற்கான எவ்விதமான அறிகுறியும் அங்கு தென்படுவதில்லை. ” என்றார்.
