மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களும் இன்று ஊழல்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்புவதன் மூலம் இவர்களுக்கும் கடந்த அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் பங்கு உள்ளது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த சட்டரீதியான நிலுவைப் பணத்தை வழங்கும் நிகழ்வு நேற்று (10.09.2026) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தொழிலாளர்களின் அரசாங்கத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது பத்தோடு பதினொன்றாக இருக்கும் அரசாங்கம் இல்லை.இந்த நாட்டிலே இருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்.
இந்த அரசாங்கத்தில் தான் மலையக மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு எமக்கு சமூக அந்தஸ்த்தும் கிடைக்கின்றது.
இன்று இந்த அரசாங்கம் என்ன செய்தது? என கேட்கிறார்கள் நீங்கள் செய்ததைப் போன்ற ஊழலையோ மக்களுக்கு எதிரான அட்டூழியங்களையோ செய்யவில்லை. நாங்கள் நாட்டின் அபிவிருத்திக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இதில் வேறு அவர்கள் செய்ததை நாம் கூற வேண்டுமாம் அவ்வாறு நாங்கள் கூறப் போனால் நேரம் போதாது. ஏனெனில் நீங்கள் அவ்வளவு அநியாயம் செய்துள்ளீர்கள். கடந்த காலங்களில் இந்த நாட்டில் நடந்த அனைத்து ஊழல், திருட்டு அநியாயங்களிலும் உங்களுக்கு பங்குண்டு.
ஏனெனில் கடந்த அரசாங்கங்களில் நீங்கள் பங்காளியாகவும் அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள்
எனவே உங்களால் ஊடகங்களுக்கு முன்பாக மட்டும் தான் பேச முடியம் மக்கள் முன்பாக போய் பேசி பாருங்கள் தகுந்த பதிலை கூறுவார்கள் என்றார்.










