நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கு அரசியல் மற்றும் சமாதான கட்டமைப்பு விவகாரங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகள் துறைகளுக்கு (DPPA-DPO) பொறுப்பான உதவி பொதுச் செயலாளர் Khaled Khiari, யுடன் உயர்மட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஜயந்த ஜயசூரியவும், இலங்கை பிரதிநிதிக் குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, ஐ.நா. சமாதான பணிகளுக்கான படையினரை அனுப்புவதற்கான முன்பதிவுத் திட்டங்கள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் விரிவான விளக்கத்தை வழங்கினர்.
அனுப்பப்படவுள்ள அனைத்து பணியாளர்களும் மனித உரிமைகள் தொடர்பான கவனிப்புக் கொள்கை (HRDDP), சர்வதேச மனிதாபிமான சட்டம் (IHL), மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் (IHRL) ஆகியவற்றில் விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சிகளைப் பெறுவார்கள் என வலியுறுத்தப்பட்டது.
இந்தப் பயிற்சி திட்டங்கள், ஐ.நா. விதிமுறைகளுடன் இணக்கமாக செயல்படுவதையும், செயல்பாட்டு சூழல்களில் தொழில்முறை நடத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்பயிற்சித் திட்டங்களில் நிலையான விதிமுறைகள் மற்றும் தரங்களை மீறுவதற்கான விளைவுகள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. குற்றச்சாட்டுகளை அறிக்கையிடுதல் மற்றும் விசாரணை நடத்துதல் தொடர்பான நடைமுறைகள், மற்றும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட வலுவான பொறுப்புணர்வு முறைமைகள் அமல்படுத்தப்படும் என்றும் விளக்கப்பட்டது.
இதனுடன், இந்த விடயத்தில் தேசிய விசாரணை அதிகாரியின் பங்கும் வலியுறுத்தப்பட்டது.










