இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள பொதுக் கடன் முகாமைத்துவ பணியகத்தின் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான புள்ளிவிவரக் கடன் அறிக்கையிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
மொத்தப் பொதுக் கடன், 2026 மார்ச் மாத இறுதியில் ரூ. 32.233 டிரில்லியனாக இருந்த நிலையில், ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி ரூ. 32.977 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. இது இரண்டாவது காலாண்டில் சுமார் ரூ. 744 பில்லியன் அதிகரிப்பாகும்.
ரூபாய் மதிப்பில் அதிகரிப்பு இருந்தபோதிலும், அமெரிக்க டொலர் மதிப்பில் கணக்கிடும்போது கடன் மார்ச் மாத இறுதியில் 102.27 பில்லியன் டொலராக இருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 97.95 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.
ஜூன் மாத புள்ளிவிவரங்கள், ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ. 336.6623 என்ற காலாண்டு இறுதி நாணய மாற்று விகிதத்தைப் பயன்படுத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மத்திய அரசாங்கத்தின் கடனே பெரும்பான்மையாக உள்ளது; இது மார்ச் மாத இறுதியில் ரூ. 31.193 டிரில்லியனாக இருந்த நிலையில், ஜூன் மாதம் ரூ. 31.999 டிரில்லியனை எட்டியுள்ளது.
இதில், உள்நாட்டு அரசாங்கக் கடன் ரூ. 19.203 டிரில்லியனாக இருந்த நிலையில், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் ரூ. 12.796 டிரில்லியனாக உள்ளது.
அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன், மார்ச் மாத இறுதியில் 37.47 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து ஜூன் மாத இறுதியில் 38.01 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.
இது பெயரளவில் 540 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடனில், பலதரப்புக் கடன் 38%, வர்த்தகக் கடன் 34% மற்றும் இருதரப்புக் கடன் 28% ஆக இருந்தன.
இருதரப்புக் கடன் வழங்குநர்களில், சீனா 5.01 பில்லியன் அமெரிக்க டொலர் நிலுவைத் தொகையுடன் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து ஜப்பான் 2.27 பில்லியன் அமெரிக்க டொலருடனும், இந்தியா 853.9 மில்லியன் அமெரிக்க டொலருடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அரசாங்க உத்தரவாதக் கடன் ரூ. 971 பில்லியனாக இருந்தது.
அதே நேரத்தில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடன் சுமார் ரூ. 7 பில்லியனாக இருந்தது.
