கனேமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
கனேமுல்ல, சுமேத மாவத்தையில் வீடொன்றை சோதனையிட சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சந்தேகநபர், கடந்த 9ஆம் திகதி சீதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர், இதற்கு முன்னர் பல பாதாள உலகக் குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தன .
சந்தேகநபர் மார்ச் 09 ஆம் திகதி ஜா-எல, தண்டுகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், துப்பாக்கிதாரியாக செயற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ‘பெட்டா மஞ்சு’ எனப்படும் பாதாள உலகக்குழு தலைவரின் நெருங்கிய நண்பராக இருந்ததாக நம்பப்படுகிறது.










