கடுமையாக எதிர்க்கின்றோம்: ஒட்டுமொத்த நீதித்துறையும் போர்க்கொடி!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் கூட்டமாக இது அமைந்திருந்தது.

இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

“நீதிபதிகளுக்கு நீதிமன்றத்திற்கு வெளியில் பேசுவதற்கு என்று தனிக்குரல் இல்லை. அவர்களையும் எமது சட்டத்தரணிகள் சங்கமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர்களும் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த வகையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனைக்கு ஒட்டுமொத்த நீதித்துறையும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எவரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் எழுப்புவோம்; இது தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வையும் கருத்தாடலையும் உருவாக்குவோம். இந்த முன்மொழிவு மிகப்பெரிய அநீதியாகும்; இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். நீதித்துறையின் சுயாதீனம் பாதிக்கப்பட்டால், அது தற்காலிகப் பிரச்சினையாக முடிந்துவிடாமல் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எம்மிடம் கலந்துரையாடவில்லை. ஆலோசனை பெறவில்லை. இந்த முன்மொழிவு மேல் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் முடிவாகும். ” என்றார்.

Related Articles

Latest Articles