T-20 உலகக்கிண்ணத்தில் விளையாடுவோம் – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் அணி 20க்கு20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியால் ரி 20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராக முடியாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், 20க்கு20 உலகக்கோப்பையில் நிச்சயமாக பங்கேற்போம் என, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடக முகாமையாளர் ஹிக்மாட் ஹசன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹிக்மாட் ஹசன் கூறுகையில் ‘‘நாங்கள் ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் உலகக் கிண்ணத்துக்கான அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் காபூல் நகருக்கு பயிற்சி மேற்கொள்ள வருவார்கள்.

அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு அணிகளுடன் இணைந்து விளையாட இருக்கும் முத்தரப்பு ரி 20 தொடரை நடத்துவதற்கான இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஹம்பாந்தோடடையில் பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறோம். அதன்பின் உள்ளூர் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளோம். உலகக்கோப்பைக்கு தயார்படுத்த இந்தத் தொடர்கள் சிறந்தவையாக இருக்கும்.

ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. நாங்கள் எப்போதும் எங்களுடைய வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் உதவி வருகிறோம். எங்களால் என்னென்ன முடியுமோ? அதையெல்லாம் செய்வோம். காபூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். அதனால் கவலைப்படுவதற்கு ஏதுமில்லை’’ என்றார்.

Related Articles

Latest Articles