அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போரில் அமெரிக்க ராணுவம் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளது.
ஆனால் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஈரான் கடற்படை, விமானப்படை முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் அணு சக்தி தளங்கள் தகர்க்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.
இந்தப் போர் நிறுத்தம் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. அதற்குள் அமெரிக்காவுடன் ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
இல்லையெனில் ஈரான் முழுவதும் குண்டுமழை பொழியும். அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம். போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை.
என்னைப் பொறுத்தவரை இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் ஈரான் பிரதிநிதிகள் கண்டிப்பாக பங்கேற்பார்கள். இல்லையெனில் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்கும்.
ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
