“ மலையக மக்களின் நலனுக்காக இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பு நாம் பெற்றுத் தருவோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“கடந்த காலங்களில், பல தசாப்தங்களாக இந்த மலையக சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசப்பட்டன. ரணசிங்க பிரேமதாச காலத்திலும், அதற்கு முன்பும் இவர்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்கும் பணி நடந்தன.
தற்போதைய அரசாங்கம் மலையக சமூகத்துக்கு தேர்தல் காலத்தில் தனிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டன. ஆனால் இந்த தருணத்தில் தோட்டத் துறையில் இந்த சமூகத்தை பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாக்கி, உடல் ரீதியான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகாமம் தோட்டத்தில் நடந்த தாக்குதலுடன் பார்க்கும் போது மலையக மக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு காணப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.
டித்வா சூறாவளியினால் மலையக மக்கள் வாழும் பகுதிகளுக்கும் பல சேதங்கள் ஏற்பட்டன. இப்பகுதிகளில் வாழும் மக்கள் பல துயரங்களுக்கு முகம் கொடுத்தனர். வீடுகளை இழந்து இடைத்தங்கள் முகாம்களிலும் வாழ்ந்தனர்.
மஸ்கெலியா தோட்டத்தில் 40 குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்தன. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50, மற்றும் 100 இலட்சம் நிவாரணங்களும் இன்றுவரை கிடைக்கவில்லை.
இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் சேதமாகின. இருந்தும் இந்த உட்கட்டமைப்பு வசதிகளைக் கூட செய்து கொடுப்பதற்கும், இதற்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது .
2026 மார்ச் மாதம் ஜனாதிபதி ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டாலும், இன்னும் 50 இலட்சம் நிவாரணம் கூட மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை.
தேயிலைத் துறையில் 40 சதவீதம் ஆன பங்களிப்பைப் பெற்றுத் தரும் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேசிய தேயிலை உற்பத்தியில் அதிக பங்களிப்பை பெற்றுத் தரும் வேளை, அதிக தேயிலைக் காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் குறைந்த பங்களிப்பையே பெற்றுத் தருகின்றனர்.
பயிரிடப்படாத இந்த காணிகளை மலையக சமூகத்தினருக்குப் பிரித்துக் கொடுத்து, அவர்களை சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும். இது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும்.
நாட்டிற்கு பில்லியன் கணக்கான டொலர்களை ஈட்டித் தரும் இந்த மக்களுக்காக, அவர்களின் நலன்புரிக்காக, வெறுமனே அறிக்கைகளை மாத்திரம் வெளியிடாமல், இவர்களுக்கான கடமைகளை உண்மையிலேயே நிறைவேற்றி, இவர்களின் நலனுக்காக இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்பு நாம் பெற்றுத் தருவோம்.” –என்றார்.










