கவரவில தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் இன்று (12) முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி தோட்டத்திலுள்ள 8 தொழிலாளர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதி கோரியும் கடந்த 50 நாட்களாக போராடிவந்தனர்.
இப்போராட்டம் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டமாக மாறியது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவர் நேற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான கிருஷ்ணன் கலைச்செல்வி இன்று காலை கவரவில தோட்டத்துக்கு சென்றிருந்தார்.
குறித்த 08 தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்ப்பதற்கு தோட்ட நிர்வாகம் ஒப்பு கொண்டுள்ளது எனவும், ஏனைய பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும் எனவும் தொழிலாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்தே போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்றம் உறுப்பினர் கலைச்செல்வி,
“உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் 50 நாட்களாக வேலை நிறுத்தப்பட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டன.
சில தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசியல் லாபங்களுக்காக தோட்டத் தொழிலாளர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர்.
நாளை (13) வேலைக்குத் திரும்பும் இந்த 08 தோட்டத் தொழிலாளர்களின் இழந்த உரிமைகளை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
