“சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
சட்டமா அதிபருக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் இடம்பெற்றது. அதேபோல அவருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் சிலர் களமிறங்கி இருந்தனர்.
இந்நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“சட்டமா அதிபரை பாதுகாக்க வேண்டும் என ஒரு சாராரும், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மற்றுமொரு சாராரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
சட்டமா அதிபரை பாதுகாக்கும் நீதி அமைச்சரும் வீடு செல்ல வேண்டும் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.
ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் உரிய இடங்களில் அவற்றை தாக்கல் செய்யலாம். ஏனெனில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம்.
சட்டமா அதிபரை நீக்குவது பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட வில்லை. குற்றப் பிரேரணை கொண்டுவருவது பற்றியும் கலந்துரையாடப்படவில்லை.” – என நீதி அமைச்சர் மேலும் கூறினார்.
