சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது! – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சமஷ்டியை அடிப்படையாக வைத்தே தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அந்தச் சமஷ்டிக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்தினாலேயே தமிழரசுக் கட்சி ‘சமஷ்டிக் கட்சி’ என்று அழைக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை அந்த அடிப்படை மாறாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக இக்கட்சி பயணித்து வருகின்றது. அத்தகைய உன்னத கொள்கையை எமக்குத் தந்த பெருந்தகையை இன்று நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்றோம்.

தந்தை செல்வாவின் பிறந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்மாதம் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நினைவு தின நிகழ்வின் ஓர் அங்கமாக, ‘இலங்கை அரசமைப்பு சீர்திருத்தம் சமஷ்டி வழியில்’ என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விசேட சொற்பொழிவை ஆற்றவுள்ளார். சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டே தந்தை செல்வா அரசியலை முன்னெடுத்தார் என்பதால், அந்தத் தலைப்பில் உரையாற்றுவது மிகவும் பொருத்தமானதாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles