ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இது போர் நிறுத்தம் சார்ந்து இருக்காது என சூசகமாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் கூறியது:
“அமெரிக்க தேசம் தனது நோக்கத்தை எட்டுவதில் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. அதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எங்களது ராணுவ நடவடிக்கையை மட்டுப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
எங்கள் தரப்பு போர் நிறுத்தத்தை நாடவில்லை. ஏனெனில், இதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதாக கருதுகிறேன். எதிர்தரப்பை முற்றிலுமாக அழிக்கும்போது போர் நிறுத்தம் அவசியமற்றது.
ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து சார்ந்து பயன்படுத்தும் நாடுகள்தான் அதை கண்காணிக்க வேண்டும். அமெரிக்கா அந்தப் பணியை செய்யாது.
எங்களிடம் அது தொடர்பாக கேட்டுக்கொண்டால் அந்த முயற்சியில் நாங்கள் உதவுவோம். ஈரான் அச்சுறுத்தல் முழுவதுமாக ஒழிக்கப்பட்டால் அதற்கு கூட தேவை இருக்காது.
ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தை அமெரிக்கா தயார். ஆனால், அவர்கள் பக்கம் அதை முன்னெடுக்க யாரும் இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு அந்த பொறுப்பை ஏற்ற மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது குறித்து செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், ‘அந்த திட்டம் எங்களுக்கு இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அந்த தீவில் இருந்த ராணுவ நிலைகளை முற்றிலுமாக அளித்துள்ளோம்’ என்றார்.
அவரது இந்த பேச்சு மூலம் ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
