தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு:பீபா போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பா முடிவு!

FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு முன்னெடுக்கப்பட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) வாக்களித்துள்ளது.

FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின் (Gianni Infantino) உலகக் கோப்பைப் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், FIFA வின் அனைத்துப் போட்டிகளையும் புறக்கணிக்க UEFA வின் உறுப்புச் சங்கங்கள் வியாழக்கிழமையன்று ஏகமனதாக ஒப்புக்கொண்டன.

தனியார் முதலீட்டாளர்களின் 20 சதவீத பங்களிப்புடன், 20 பில்லியன் டொலர் வணிக நடவடிக்கையாக உலகக் கோப்பையைப் பிரித்தெடுக்கும் இன் பான்டினோவின் இரகசிய திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது.

ஜோசுவா குஷ்னரால் (Joshua Kushner) உருவாக்கப்பட்ட நியூயோர்க்கைச் சேர்ந்த துணிகர மூலதன முதலீட்டு நிறுவனமே (Venture capital firm) இதன் முக்கிய முதலீட்டாளராக இருக்கும் எனக் கூறப்பட்டது.

இது குறித்து UEFA வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இத்திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டு, FIFAவின் ஆட்சிமுறையோ அல்லது போட்டிகளோ இனி ஒருபோதும் தனியார் உரிமையாளர்களின் கீழ் கொண்டுவரப்படமாட்டாது என்ற பிணைப்புடனான உறுதிமொழி வழங்கப்படும் வரை, எந்தவொரு UEFA தேசிய அணியும் FIFAவின் போட்டிகளில் பங்கேற்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “உலகக் கோப்பையை ஒரு முதலீட்டுப் பொருளாகக் கருத முடியாது. அது கால்பந்தாட்டத்தின் மிகப் பெரிய விளையாட்டுப் பாரம்பரியங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள வீரர்கள், தேசிய அணிகள் மற்றும் ரசிகர்களால் தலைமுறை தலைமுறையாக இது கட்டியெழுப்பப்பட்டது.

இதன் எந்தப் பகுதியையும் தனியார் முதலீட்டாளர்களுக்கு ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. உலகக் கோப்பை விற்பனைக்கானது அல்ல” என்றும் UEFA உறுதியாகத் தெரிவித்துள்ளது.

அடுத்ததாக நடைபெறவுள்ள FIFA போட்டியானது ஐரோப்பாவில் நடக்கவுள்ளது. வரும் செப்டம்பர் 5 முதல் போலந்தில் மகளிருக்கான 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles