வலதுசாரி அல்லது இடதுசாரி என கருதாமல் பொது மக்கள் முகாமை வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றன. இதில் காமினி திசாநாயக்க எதிர்பார்த்தது போல் நாட்டின் வயல்வெளிகளை செழுமைப்படுத்தி உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்கி வலுப்படுத்தும் பொது மக்கள் முகாமை கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான காலமே இதுவாகும். அத்தகைய ஒன்றிணைவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து அடித்தளம் இடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (20) மாலை இடம்பெற்ற இந்நாட்டின் அரசியல் ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்க அவர்களினது 84 ஆவது ஜனன தின நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சமூகம் இப்போது கட்சி தாவும் அரசியலையும், டொலர் கட்டுகளுக்கு நிலைமாறும் அரசியலையும் ஏற்றுக்கொள்வதில்லை. அத்தகைய கூட்டணிக்கும் ஒன்றிணைவுகளுக்கும் மக்கள் தயாராக இல்லை. மக்களின் ஆணையால் பெற்ற வெற்றியில் இறுதியில் வெற்றி பெற வேண்டியது பொது மக்களே ஆகும்.
மக்கள் நம்பிக்கையை, பொது மக்களின் உரிமைகளை காசுக்கு விற்ற காலம் முடிந்து விட்டது. நடுத்தர பாதை, பொது மக்கள் பாதை, மூன்றாவது பாதையை தோற்று விக்க சீரழிந்த முதலாளித்துவத்தையும், தீவிர தாராளவாத கோட்பாடுகளையும் புறக்கணித்து, தீவிர கம்யூனிசவாதம் மற்றும் சமூகவாதத்தையும் புறக்கணித்து, மனிதநேய முதலாளித்துவம் மற்றும் சமூக நீதியை நோக்கி, ஐக்கியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் பேணி, சம்புத்த சாசனத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கி அதனைப் பாதுகாத்து, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து, சகோதரத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் செயல்படும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
என்னுடைய அரசியலுக்கு ஆரம்பத்தை வழங்கியவர்கள் பற்றி பலரும் பல விளக்கங்கள் கூறினாலும், குடும்ப அரசியலை புறக்கணித்தவராக ரணசிங்க பிரேமதாசவின் மறைவிற்குப் பின்னர் நான் அரசியலில் நுழைந்தேன். என்னுடைய அரசியல் மற்றும் சமூக சேவை பயணத்திற்கு காமினி திசாநாயக்கதான் ஆரம்பத்தைப் பெற்றுத் தந்தார். ஹம்பந்தோட்டை மாவட்ட அமைப்பாளர் பதவியையையும் அவர் தான் பெற்றுத் தந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் பொது மக்களின் தலைவராக திகழ்ந்த காமினி திசாநாயக்க அவர்கள், 30 ஆண்டுகளில் நிறைவு செய்ய வேண்டிய மகாவலி திட்டத்தை ஆறு வருடங்களில் முடிக்கும் சவாலை ஏற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினார். ஸ்வர்ணபூமி ஒப்பு திட்டத்தை உருவாக்கியதும் அவர்தான் என்று தெரிவித்தார்.
இடதுசாரியும் வலதுசாரியும் இரண்டுமே தோல்வி கண்டு விட்டன என்பது தான் தற்போதைய கள யதார்த்தமாகும். இந்த இடதுசாரி மற்றும் வலதுசாரி கோட்பாடுகள் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு தறிவிக்கப்பட்ட அன்னியக் கோட்பாடுகள் ஆகும். மக்களாட்சிய கோட்பாடே இன்று நமது நாட்டிற்கு தேவையான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. பொது மக்களை பாதுகாத்து, பொது மக்களின் நலனுக்காக செயல்படும் கோட்பாடே தற்சமயம் அவசியாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.










