ஹோர்முஸ் நீரிணைப்பில் சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளது.
இந்த வாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய மூன்றாவது சுற்று தாக்குதல் இதுவாகும் என அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
ஈரானியப் படைகளின் தாக்குதல் திறனை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பின்வரும் இலக்குகள் துல்லியமாகத் தாக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள்
கடற்படைத் தளங்கள் மற்றும் படகுகள்
ஆயுதக் கிடங்குகள் (Ammunition storage facilities)
தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள்
கடற்கரைக் கண்காணிப்பு மையங்கள்
ஹோர்முஸ் நீரிணைப்பு வழியாகப் பயணிக்கும் சிவிலியன் மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த வாரத்தில் மட்டும் மூன்று இரவுகளாக 300-க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன என அமெரிக்க மத்திய கட்டளையகம் மேலும் கூறியுள்ளது.
மே மாதம் தொடக்கத்தில் இருந்தே சர்வதேசக் கடல் எல்லையான ஹோர்முஸ் நீரிணைப்பைக் கடக்க அமெரிக்கப் படைகள் உதவி வருகின்றன. இதுவரை சுமார் 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற 800-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள், அமெரிக்கப் படைகளின் பாதுகாப்போடு இந்த நீரிணைப்பை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
