“மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் விமர்சனம் இருந்தது. தம்மை மக்கள் விமர்சித்தபோதிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.
எனினும், வடக்கு மக்களின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்? எனது கேள்வி சரிதானே?
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
“ ஜனாதிபதி வடக்குக்கு செல்கின்றார். சுதந்திரமாக நடக்கின்றார். செல்பி எடுக்கின்றார். இது நல்ல விடயம். இதில் எவ்வித தவறும் கிடையாது.
இப்படி மக்கள் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியால் ஏன் தேர்தலை நடத்த முடியாதுள்ளது.” என்றார் மனோ கணேசன்.
“மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய யோசனைக்கு நாம் ஆதரவளித்தோம். எதிரணியில் இருக்கும்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அதற்கு ஆதரவளித்தார்.
எனினும், தற்போது அவர்களின் நிலைப்பாடு மாறியுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய தனிநபர் சட்டமூலம் உள்ளது. அதனை அரசாங்கம் தமது சட்டமூலமாக கொண்டுவர வேண்டும். இதற்குரிய கோரிக்கையை நாம் முன்வைப்போம்.” என்றார் மனோ கணேசன்.
