மட்டக்களப்பு – வாழைச்சேனை நகருக்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-
இன்று அதிகாலை வேளையில் காட்டுப் பகுதியில் இருந்து வாழைச்சேனை நகருக்குள் நுழைந்த காட்டு யானை, வீதிகளில் சென்றவர்கள் மற்றும் குடியிருப்புகள் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்போது, யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவர் அப்பகுதி மக்களால் உடனடியாக மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகக் கிராமப்புறங்களிலேயே காட்டு யானைகளின் ஊடுருவல் காணப்படும் நிலையில், தற்போது நகர்ப் பகுதிக்குள் யானை புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகள் கிராமங்களுக்குள் மட்டுமன்றி, சனநெரிசல் மிக்க நகர் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸாரும் இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










