மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை முடிவுக்கு கொண்டுவருமாறு அனைத்து தரப்புகளிடமும் இலங்கை கோரிக்கை விடுக்கின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை மற்றும் எரிபொருள் விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.
“ உயிரிழப்புகளையும், பேரிழப்புகளையுமே போர் தரும். எனவே, எங்கு நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உலக அமைதி, பிராந்திய ஸ்தீரத்தன்மை மற்றும் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலக அமைதிக்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்தவகையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை முடிவுக்கு கொண்டுவருமாறு அனைத்து தரப்புகளிடமும் இலங்கை கோருகின்றது.
அதேவேளை, மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
உள்நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.










