அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை!

அக்கரப்பத்தனை, கிலாஸ்கோ தோட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கல்வி கற்கவந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நடராஜ் விஜயகுமார் வயது (36) என்பவருக்கே இந்த கடூழிய சிறை தண்டனையை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இன்று (20.02.2024) வழங்கினார்.

கடந்த (06.07.2017) ஆம் ஆண்டு, அக்கரப்பத்தனை கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய குறித்த நபர், அக்காலப்பகுதியில் பிரஜா சக்தி நிலையத்தில் கல்வி கற்க வந்திருந்த 18 வயதுக்கும் குறைவான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்து.

இவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக கடந்த ஆறு வருடங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்கானப்பட்ட இவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி (20.02.2024) இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் மேலும் மூன்று வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், நீதிமன்ற தண்டனை பணமாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles