தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் என்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
ஆயிரம் ரூபா என்ற உறுதிமொழி 5 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், தற்போது எல்லா கொடுப்பனவையும் சேர்த்து ஆயிரம் ரூபா வழங்கும் சம்பள சூத்திரம் தயாரிக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் வெளிப்படைதன்மை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களே கூட்டாக இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அதேவேளை, கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் பெருந்தோட்டத்துறையை பாதுகாத்து ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு நாம் தோள்கொடுத்துள்ளோம். ஆகவே, எமக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசாங்கம் உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
