2021 உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு பெற்ற மாணவர்களின் பதிவு அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்.
இரண்டு வாரங்களுக்குள் பதிவு நடவடிக்கைகள் நிறைவடையும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பதிவுகளை நிறைவு செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
பதிவுச் செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏதேனும் வெற்றிடங்கள் ஏற்பட்டால் பல்கலைக்கழக நுழைவுக்கான முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் டிசம்பர் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டன. படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப பதிவுகள் முடிக்கப்பட்டு வருவதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது.
பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படும் என பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.










