‘அதிகாரியே அடங்கிப்போ’ – கொட்டகலையில் மீண்டும் போராட்டம்!

20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்தும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதியும் மேற்படி விடயங்களை முன்னிலைப்படுத்தி தொழிலாளர்கள் போராடினர். எனினும், இன்னும் அவர்களுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. எனவே, உடனடி தீர்வை கோரியே இன்று (03.07.2021) மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சட்டப்பூர்வமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு 800 ரூபாவே வழங்கப்படுகின்றது என சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள், தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்தாக வேண்டும் என விடாப்பிடியாகவும் நிற்கின்றனர்.

நாளொன்றுக்கான பெயருக்கு 17 கிலோ கொழுந்தே முன்னர் பறிக்கப்பட்டது. ஆனால் தற்போது 20 கிலோவுக்கு குறைவாக பறிப்பவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படும் என நிர்வாகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருவதுடன், தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க தவறிவருகின்றன எனவும் சுட்டிக்காட்டினர்.

” சம்பளத்துக்கு போராடினால் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றது. அவ்வாறான நடவடிக்கை தற்போது எமது தோட்டத்தில் நடக்கின்றது. அடிப்படை நாட் சம்பளத்துக்கு 17 கிலோ கொழுந்து பறித்தால் போதும் என்ற ஏற்பாடு உள்ள நிலையில் கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன.

நிர்வாகத்தின் தான்தோன்றித்தனமான – அடாவடித்தனமான – தொழிலாளர்களை அடிமைகளாக வழிநடத்தும் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கமும் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மீண்டும் கோருகின்றோம்” – எனவும் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles