ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை இலக்கு வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அதுமட்டுமல்ல கண்டனக் கணைகயும் குவிந்துவருகின்றன.
கம்பஹாவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டின்போதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவன்கார்ட் நிறுவனத்தின் பிரதான நிசங்க சேனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரமே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் ஜே.வி.பி. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கு வந்திருந்த சிலரே ஜே.வி.பி. ஆதர வாளர்கள் மடக்கிப்பிடித்திருந்தனர். அவர்கள் அவன்கார்ட் நிறுவனத்தின் பணியாற்றியவர்களென பின்னர் தெரியவந்தது.
அவன்கார்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகளை ஜே.வி.பியினர் அம்பலப்படுத்திவருகின்றனர். இதன்காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், அநுரவை கொலை செய்வதற்கான சூழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமே இதுவெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜே.வி.பியினரால் முறைப்பாடு செய்யப்பட்டும் உள்ளது.
இதற்கிடையில் இத்தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்ய வேண்டாமென காவல்துறை மேல் மட்டத்திலிருந்து கட்டளையொன்று வந்ததாகவும் தற்போது தகவல் கசிந்துள்ளது.
அதேவேளை, மாநாடு நடைபெற்ற மண்டபத்துக்கு மற்றுமொரு வழியிலேயே அநுர குமார திஸாநாயக்க வந்துள்ளார். அவருக்கு நிகரான (டம்மி) ஒருவரே பிரதான வழியில் வந்துள்ளார். இருவரும் ஒரே வகையான வாகனத்தையே பயன்படுத்தியுள்ளனர். டம்மி வேட்பாளர் வந்த வாகனமே தாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஜே.வி.பியால் அதன் தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பலரும் தற்போது வியப்படைந்துள்ளனர்.










