நிட்டம்புவ பிரதேசத்தில் கடந்த மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர்.
குறித்த சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட குடும்ப நல விடயங்கள் குறித்து கேட்டறிந்ததோடு, பிள்ளைகளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தமக்கு அறிவிக்குமாறு கூறினார்.
அந்த பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குடும்ப நலனுக்காகவும் அரசாங்கத்தின் நன்கொடையின் ஊடாகவோ தனிப்பட்ட முறையிலோ எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தனவின் சார்பில் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து ஜனாதிபதியினால் நிதியுதவி வழங்கப்பட்டமையும் நினைவூட்டத்தக்கது.










