எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை அறுவை ச சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமுலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை இரத்து செய்யப்படும் என்று புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை இரத்து செய்யப்பட உள்ளது. இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
சமூக நல அமைப்புகளும் ட்ரம்பின் இந்த முடிவுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன.
அதிபர் ட்ரம்பின் முடிவு குறித்து இந்திய வம்சாவளியினர் கூறும்போது, “பிறப்பு குடியுரிமை சட்டத்தின் மூலம் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்திருக்கிறது. ஜனாதிபதி ட்ரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ” என்று தெரிவித்துள்னர்.
அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நடைமுறை இரத்து செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளை சேர்ந்த கர்ப்பிணிகள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் அமெரிக்கா முழுவதும் சிசேரியன் மூலமான குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மகப்பேறு மருத்துவர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமை நடைமுறை எதிர்வரும் பெப்ரவரி 19-ஆம் திகதி முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொள்ள வெளிநாட்டு பெண்கள் விரும்புகின்றனர். குறிப்பாக இந்திய கர்ப்பிணிகள் உடனடியாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிசேரியன் தொடர்பாக எனக்கு மட்டும் ஒரு நாளில் 20 கோரிக்கைகள் வருகின்றன. அமெரிக்க சட்டவிதிகளின்படி சிசேரியன் மூலம் முன்கூட்டியே குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து உள்ளது. குறிப்பாக வளர்ச்சி அடையாத நுரையீரல், நரம்ப மண்டல பாதிப்பு, எடை குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.” என்றும் இந்திய வம்சாவளி வைத்தியர் தெரிவித்துள்ளார்.