அரச பெருந்தோட்டங்கள் அனைத்திற்கும் 1000 ரூபாய் சம்பளம் முழுமையாக இன்று வழங்கப்பட்டுள்ளது என பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அரச பெருந்தோட்ட நிறுவனமான எஸ்.எஸ்.பி.சி (S.S.P.C)க்கு 1000 ரூபாய் சம்பளம் கடந்த வாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஜனதா எஸ்டேட் மேம்பாட்டு வாரியம் (J.E.D.B), எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் (Elkaduwa plantation) ஆகிய நிறுவனங்களின் கீழ் இயங்கும் தோட்டங்களுக்கும் 1000 ரூபாய் சம்பளம் இன்று முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
ஜனதா எஸ்டேட் மேம்பாட்டு வாரியம் (J.E.D.B) நிறுவனத்தின் கீழ் இயங்கும் கண்டி, மொனறாகலை, பதுளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 18 தோட்டங்களில் பணியாற்றும் 4000 தொழிலாளர்களுக்கும், மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் (Elkaduwa plantation) கீழ் இயங்கும் 09 தோட்டங்களை சேர்ந்த 1,200 தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ரூபாய்ப்படி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பறித்த மேலதிகக் கொழுந்துகளுக்கான கொடுப்பனவுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டில், அரச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு இன்று முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
