இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட்டில் மிக தீர்க்கமாக நடைபெற்ற சுப்பர் 8 சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென் ஆபிரிக்கா அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மூன்று விக்கட்டுகளால் இப்போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது.
முதலில் களத்தடுப்பை தேர்வு செய்த தென் ஆபிரிக்கா ஆரம்ப ம் முதலே மேற்கிந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்களை சேகரிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஐந்து ஓட்டங்களை பெறுவதற்குள் இரண்டு விக்கட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட மேற்கிந்திய அணிக்கு ரோஸ்டன் சேஸ் மட்டும் அரைச்சதம் கடந்து ஆறுதல் அளித்தார்.
136 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்காவும் ஆரம்பம் முதலே விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் போட்டியை பாதிக்கும் வகையில் மழை குறுக்கிட்டதால் தென் ஆபிரிக்காவுக்கு 17 ஒவர்களுக்கு 123 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஜென்சன் கடைசி ஓவரின் முதல் பந்தில் அடித்த ஆறு ஓட்டங்களுடன் தென் ஆபிரிக்கா அரை இறுதிக்கு தகுதிபெற்ற அதேநேரம், போட்டிகளை நடத்திய நாடான மேற்கிந்திய தீவுகள் உலகக்கிண்ணத்திலிருந்து வெறியேறியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் இன்னிங்சில் மொத்தமாக 57 டொட் பந்துகள் பதிவாகின. இது மொத்தமாக 9.3 ஒவர்களாகும். இந்த உலகக்கிண்ணத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச ஓட்டங்கள் பெறாத பந்துகளாக அவை காணப்பட்டன. ஒவ்வொரு ஓட்டமும் எவ்வளவு முக்கியமானவை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சுரேஸ் குமார் பேனா