ஆசியாவில் மீண்டும் கொரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு!

 

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

தற்போது பரவி வரும் ஒமைக்ரான் பிஏ.2.86 திரிபான ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, முக்கிய நகரங்களில் சுகாதார துறையின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மக்கள் புதிதாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

சிங்கப்பூரில் கடந்த மே 3-ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து 14,200 ஆக உள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் பெரும்பாலும் 30-39 வயதினரிடம் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மே 17-ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 33,030 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. மே 19-ம் திகதி நிலவரப்படி, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257 ஆக உள்ளது.

Related Articles

Latest Articles