ஆனையிறவு உப்பு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும்

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு ஆனையிறவில் நடைபெற்றது.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது தற்பொழுது ரஜ என்ற பெயரிலேயே வெளிவருகின்றது.

கடந்த ஆட்சி காலத்திலேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெயரை மாற்ற முடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன. உடனடியாக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே பழைய பெயரிலேயே விநியோகிக்கப்படுகின்றது.

வெகுவிரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஆனையிறவு உப்பளத்தின் பெயரிலேயே இலங்கையில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும். இது தொடர்பில் தமக்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles