டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகின்றது.
கடந்த 21 ஆம் திகதி டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 219 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 119 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 376 ஓட்டங்கள் குவித்து, 157 ஓட்டங்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருந்தது.
இந்நிலையில் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 406 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 187 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
105.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 261 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணிக்கு 75 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலியா.
இதனையடுத்து 75 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இதில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதில்லை என்ற சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.