” இது ஶ்ரீலங்கா கிரிக்கெட் அணி அல்ல, சிங்கள அணி. இந்நிலைமை மாற வேண்டும். இன, மத பேதங்களுக்கு அப்பால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய வினோ நோகராதலிங்கம் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” உலகக்கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளது. அத்துடன், அடுத்து வரும் சாம்பியன் கிண்ண போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.
1996 இல் உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணி இன்று பரிதாப நிலையில் இருப்பதற்கு காரணம் என்ன? நிர்வாகிகள், ஊழல் என்பதற்கு அப்பால் விளையாட்டில் அரசியல் மேலாதிக்கம் செலுத்துகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட்டுக்குள் இனவாத சிந்தனை உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியை முழுமையான அணியாக ஏற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்கு இன, மத , மாநில வேறுபாடுகளுக்கு அப்பால் திறமைக்கே வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்த உலகக்கிண்ணத்தில்கூட சிறுபான்மையின வீரர்கள் அனைத்தையும் கடந்தவர்களாக தமது நாட்டுக்கு கிடைக்கும் வெற்றிக்கு பெரிதும் பங்களிப்பு செய்துவருகின்றனர்.
இலங்கை கிரிக்கெட் அணியில் சிறுபான்மையின வீரர்கள் ஓரங்கப்பட்டுகின்றனர், புறக்கணிக்கப்படுகின்றனர். இனபாடுபாடு இல்லாமல் செய்யப்பட வேண்டும். இன்று இலங்கை உதைப்பந்தாட்ட அணி சிறப்பாக செயல்படுகின்றது. அங்கு அனைத்து இன வீரர்களும் உள்ளனர்.” – என்றார்.
