வேட்டியுடன் யாழ் படையெடுத்த சீன அதிகாரிகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!

இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய், சீனத் தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட சீன அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் பயணம் செய்துள்ளது. சீனாவின் பிரதித் தூதுவர் வேட்டியுடன் பயணித்துள்ளார்.

சீன அதிகாரிகள் வடக்கு நோக்கிப் படையெடுக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. இலங்கையின் வடக்கு, கிழக்கில் கவனம் செலுத்தியுள்ள சீனாவிற்கு வடக்கில் கடுமையான எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன. யாழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கும் உத்தியாக சீன அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்வதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

வடக்கில் வலுக்கும் சீன எதிர்ப்பு

ஏற்கனவே, வடக்கில் கடல் அட்டைப் பண்ணைகளை சீனா ஊக்குவித்துள்ளது. எனினும், இதனை வடக்கில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் எதிர்த்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்திருந்தது.

வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது.

வடக்கில் சீனா தனது ஆதிக்கத்தை பலப்படுத்தும் பிரயத்தனங்களில் ஒன்றாகவே யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் அட்டைப் பண்ணைகளுக்கான முதலீடுகளை மேற்கொள்ளவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.

தமிழ் மக்களின் பொருளாதார வளங்களை அழிப்பதற்காக ஆயுதம் இல்லாத யுத்தத்தை சீனா மேற்கொள்ளுமாயின் மீனவ மக்களுடன் சேர்ந்து எமது கடல் வளத்தை பாதுகாக்க போராடத் தயங்க மாட்டோம் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தது. இதற்கு மத்தியில்தான், பல்கலைக்கழகங்களை குறிவைத்து சீனா காய்நகர்த்த ஆரம்பித்தது.

சீனாவின் உதவிகளை மறுத்த யாழ் பல்கலைக்கழகம்

சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து வழங்கப்படவிருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என யாழ் பல்கலைக்கழகம் திட்டவட்டமாக அறிவித்தது.

இதனை எவ்வாறு கையாள்வது என்று யோசித்த சீனத் தூதரகம், தந்திரமான முறையில் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா கொழும்பு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அவரை அழைத்து நிதியை திணித்திருந்தது. இந்தச் செயல் நாகரிகமற்ற செயற்பாடு என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்திருந்தது.

சீனா தற்போது உதவி என்ற போர்வையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள் ஊடுருவுவது ஏதோ ஒரு சதித் திட்டத்தை நிகழ்த்தும் முன்னகர்வதாகவே பார்ப்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியிருந்தது.

வடக்கு கிழக்கை குறிவைக்கும் சீனா!

வடக்கிலும், கிழக்கிலும் தன் கால்களைப் பதிக்கத் துடிக்கும் சீனா பல்வேறு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மணாவர்களுக்கு, மாணவர் உதவித் தொகையை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வருடாந்தம் வழங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்தப் பணிகளை சீனா ஆரம்பித்தது. இது வரை காலமும் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சமமாக இந்த உதவிகள் பங்கிடப்பட்டன. ஆனால் 2022 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரமே பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

உதவிகளை மறுத்த யாழ் பல்கலைக்கழகம்

சீனத் தூதரகத்தினால் சீனத்தூதுவர் புலமைப்பரிசில் திட்டம் பற்றி மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் சமநேரத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

“உயர்கல்வி அமைச்சின் ஊடாக 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள 17 பல்கலைக்கழகங்களுக்கும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு (2022) முதல் சற்று வித்தியாசமான முறையில் வருடாந்தம் இரண்டு பல்கலைக்கழகங்களை மட்டும் தெரிவு செய்துள்ளதாகவும், அதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும், கிழக்குப் பல்கலைக்கழகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழகங்களின் ஆர்வத்தை – சம்மதத்தை அனுப்பி வைக்குமாறும்” கடந்த ஜுன் மாத நடுப்பகுதியில் இரண்டு பல்கலைக் கழகங்களுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவரின் முதற் செயலாளரினால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக அதிகாரிகளை துளைத்தெடுத்த சீனத் தூதரக அதிகாரிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஜுன் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பல்கலைக்கழகத்திடமிருந்து ஜுலை மாத இறுதிப்பகுதி வரை எந்தப் பதிலும் அனுப்பப்படவில்லை. பதில் கிடைக்காததால் சற்று அதிர்ச்சிக்குள்ளான சீனத் தூதரகம் நேரடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொலைபேசி மூலம் அணுகி அவசர, அவசரமாக தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

செப்டம்பர் 6 ஆம் திகதி கிழக்குக்கு (மட்டக்களப்புக்கு)ச் செல்வதற்கு முன்னர் 4ஆம், 5ஆம் திகதிகளில் வடக்குக்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தில் மாணவர் நிதியுதவி வழங்கும் நிகழ்வை முடித்துக் கொண்டு, மன்னாருக்குச் சென்று காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களைப் பார்ப்பது சீனத் தூதரகத்தின் திட்டமாக இருந்திருக்க வேண்டும்.

அதனால் குறித்த திகதிக்குள் பயனாளிகள் பட்டியலைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழக அதிகாரிகளை துளைத்தெடுத்த வண்ணமிருந்தனர் சீனத் தூதரக அதிகாரிகள். எனினும் அது சொல்லிக் கொள்ளக் கூடியளவு முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இருப்பினும், சீனத் தூதுவரின் வருகையும், நிதியுதவி கையளிப்பும் திட்டமிடப்பட்டது.

எனினும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சலசலப்பினால் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை ரத்துச் செய்த சீனத் தூதுவர் மட்டக்களப்புக்குச் சென்று செப்டம்பர் 6 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் நிதியுதவிக்கான காசோலையைக் கையளித்துச் சென்றார்.

யாழ்ப்பாணத்தில் தனது முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சீனா மாற்றுத் திட்டமொன்றை யோசித்தது. நிதியுதவியைப் பெறுவதற்காக பல்கலைக்கழக அதிகாரிகள் இருவரை சீனத் தூதரகம் அழைத்திருந்தது. அதனைப் பெற்றுக் கொள்ள அந்தத் திட்டத்துக்குப் பொறுப்பான விரிவுரையாளர் ஒருவரும், நலச்சேவை உத்தியோகத்தரும் அந்த உதவியை கடந்த 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனத் தூதரகத்தில் வைத்துப் பெற ஏற்பாடாகியிருந்தது. அன்றைய தினம் தேசிய பரீட்சைக் கடமைகளுக்காக கொழும்பு சென்றிருந்த துணைவேந்தர் அந்த அலுவலர்களின் அழைப்பின் பேரிலேயே அவர்களுடன் சென்று நிதியுதவியைப் பெற்றிருக்கிறார்.

இலங்கையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்ட உதவிகளை நிறுத்தி, வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களை மட்டும் சீனா குறிவைக்க ஆரம்பித்துள்ளது. வடக்கில் கடல் அட்டைப் பண்ணைகள், பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவிகள் என பொருளாதாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி சீனா ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்துள்ளது. இதில் மக்களின் எதிர்ப்புக்கள் வலுக்கக் கூடாது என்பதற்காகவும், மக்கள் மனங்களை வெல்வதற்காகவும், நல்லூர் கோயில் விஜயம், யாழ் கோட்டை விஜயம் என்ற போர்வையில் வடக்கிற்கான படையெடுப்பை சீனா ஆரம்பித்துள்ளது.

Related Articles

Latest Articles