இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வலிமை!

ஜி – 20 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டுக்கு முன்னோடியாக – ஆரம்ப கட்ட நகர்வாக முக்கிய பல கூட்டங்கள் டில்லி உட்பட இந்தியாவின் பிரதான நகரங்களை மையப்படுத்தி இடம்பெற்றுவருகின்றன. இக்கூட்டங்களின்போது முக்கிய பல விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுவருவதுடன், இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக்கொண்டே ஜி – 20 நாடுகளின் தலைவர்களின் இறுதி பிரகடனம் வெளியிடப்படும்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய ஜி – 20 மாநாட்டுக்கு இம்முறை இந்தியாவே தலைமை வகிக்கின்றது. நிலையான வளர்ச்சி இலக்குகள், பருவநிலை செயல்பாடு, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதார அமைப்பு முறைகள், டிஜிட்டல் மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் சம்பந்தமாக விவாதிக்கும் முன்னணி தளமாகவும், வலுவான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகவும் ஜி-20 விளங்குவதால், அவ்வமைப்பின் தலைமைத்துவமென்பது இந்தியா அடுத்தக்கட்டம் நோக்கி நகர வழிசமைக்குமென திடமாக நம்பப்படுகின்றது.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிடையில் பூகோள அரசியல் உறவுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா, உக்ரைன் இடையே மோதல் நடைபெற்று வரும் வேளையில், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது, பூகோள அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை வலுவான ஸ்தானத்தில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு நிச்சயம் உதவும்.

உக்ரைன் -ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய பிரதான சக்தி இந்தியாவென மேற்குலகமும் கருதுகின்றது. அந்த பணியை மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இந்தியா செய்து முடிக்கும் பட்சத்தில், அது சர்வதேச தளத்தில் ‘சமரச தூதுவர்’ என்பதற்கான புதிய வழியையும் திறந்துவிடும். உலக பொலிஸ்காரன் என அமெரிக்கா எவ்வாறு விளிக்கப்படுகின்றதோ அதுபோல உலக சமரச தூதுவர் என்ற நாமம் இந்தியாவுக்கு கிடைக்கப்பெறும். ஜி – 20 வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டின்போது ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் வகிபாகம் பற்றி பேசப்பட்டுள்ளது. நாடுகளுக்கிடையில் கூட்டணிகளை உருவாக்குவதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது. ‘அணிசேரா’ நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதற்குகூட அன்று இந்தியாதான் முன்னின்று செயற்பட்டது என்பதை மறந்துவிடமுடியாது.

இதற்கிடையில் ஜி – 20 மாநாடு மூலம் இந்தியா அடையும் நன்மைகளின் பயனாக “ நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்” என்பதுபோல அண்டை நாடான இலங்கையும் பல நன்மைகளை அடையக்கூடும்.

அதன் தாக்கங்களை இலங்கை தற்போதே அனுபவிக்க ஆரம்பித்துள்ள எனலாம்.

இந்தியாவின் தலைமைத்துவத்தின்கீழ் 2022 டிசம்பர் மாதம் முதலே ஜி – 20 மாநாட்டை மையப்படுத்திய கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், முதலாவது மேம்பாட்டு பணிக்குழு கூட்டம், முதலாவது கட்டமைப்பு பணிக்குழு கூட்டம், கூட்டு நிதி மற்றும் சுகாதார பணிக்குழு கூட்டம் என்பன டிசம்பர் மாதம் நடைபெற்றன.முதலாவது நிதி பங்களிப்பு கூட்டாண்மைக்கான கூட்டம், முதலாவது உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டம், முதலாவது சுகாதார பணிக்குழு கூட்டம், முதலாவது கல்வி பணிக்குழு கூட்டம் என்பன 2023 ஜனவரியில் நடைபெற்றன.

சுற்றுலாத்துறை, எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட துறைசார் கூட்டங்கள் பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் 1,2 ஆம் திகதிகளில் ஜி – 20 வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு டில்லியில் நடைபெற்றது. இவ்வாறு முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் என தொடர்ச்சியாக கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. செப்டம்பர் 8 ஆம் திகதிவரை இந்தியாவின் பல நகரங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டங்களின்போது கலந்துரையாடி எட்டப்படும் இணக்கப்பாடுகள் மற்றும் கடந்த கால ஒப்பீடுகள் உள்ளிட்ட விடயங்களே செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின்போது ‘டில்லி பிரகடன’மாக வெளியிடப்படும்.

இந்தியாவானது உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடாகும். இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் சுமார் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சியில் 5 ஆவது இடம்வரை முன்னேறியுள்ளது. தனிநபர் வருமானம், மொத்த தேசிய உற்பத்தி என்பன ஏற்றம் கண்டுள்ளன. இந்நிலையில் தன்னை நிலைநியுத்திற்கொள்வதற்கும், அடுத்தக்கட்டம் நோக்கி நகர்வதற்கும் ஜி – 20 மாநாடென்பது இந்தியாவுக்கு சிறந்த முதலீடு எனலாம். சர்வதேச சந்தையில் தகவல் தொழில்நுட்பம் என்பது இன்று இந்தியாவின் கைகளிலேயே உள்ளது. இந்தியாவில் வேலையிண்மை விகிதம் குறைவடைவதற்கும், தனிநபர் வருமானம் அதிகரிப்பதற்கும் இதுவும் பிரதான காரணமாகும்.

அதேவேளை, உக்ரைன் போரால் ரஷ்ய ரூபிள் வீழ்ச்சியடைந்து பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கும் சூழலில், பதினெட்டு நாடுகளுடன் இணைந்து இந்திய ரூபாவில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுத்துவருகின்றது.

இந்திய ரூபாவை சர்வதேச நாணயமாக மாறுவதன் முதற்படியாக இந்தியாவின் மத்திய வங்கி , ரஷ்யா, இலங்கை உட்பட பதினெட்டு நாடுகளில் உள்ள அறுபது வங்கிகளில் இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடாக வோஸ்ட்ரோ (Vostro) கணக்குகளை ஆரம்பிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜி – 20 தலைமைத்துவம்மூலம் வளர்ந்துவரும் நாடுகளுக்கு இந்தியாவால் உதவ முடிவும் என்பதுடன், அதன்மூலம் தமது இலக்குகளை அடைவதற்குரிய வாய்ப்பும் உதயமாகியுள்ளது.

 

Related Articles

Latest Articles