மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்பு கூறவேண்டும். இவ்வாறு 3 வருடங்களாக பிற்போடப்பட்ட தேர்தலை இன்னும் 6 மாதங்களுக்குள் நடத்த முடியும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு தமிழ்க் கூட்டமைப்பு தற்போது வலியுறுத்துகின்றது. தேர்தல் பிற்போடப்பட்டதற்கு தமிழ்க் கூட்டமைப்பும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். நல்லாட்சியின்போது தவறான வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தாலேயே மாகாண தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்தமுடியாமல்போனது. இருந்த தேர்தல் முறை நீக்கப்பட்டது. புதிய முறைமை முன்மொழியப்படவில்லை. தேர்தலை பிற்போடுவதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவை அனைத்தையும் கடந்த அரசு செய்தது.
எமது அரசு தேர்தலை ஒத்திவைக்காது. உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் புதிய சட்டமூலமொன்றை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் நாடாளுமுன்றில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்படும். எது எப்படி இருந்தாலும் 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என நம்புகின்றோம்.” – என்றார்.
