முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரவிகரன் எம்.பி.,
“எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஆகும்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.
நந்திக்கடல் அஞ்சலியைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.










