இலங்கையில் பயன்படுத்தப்படும் கொவிட் – 19 தடுப்பூசி தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உலகில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொவிட் – 19 தடுப்பூசிகள் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நிபுணர்கள் குழுவொன்று தீவிரமாக ஆராய்ந்துவருகின்றது. இவற்றில் எந்த தடுப்பூசி இலங்கைக்கு பொருத்தமானது – பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பது தொடர்பில் அக்குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகின்றது.
அத்துடன் தடுப்பூசி விவகாரத்தைக் கையாள்வதற்கென ஜனாதிபதி செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
எனவே, எந்த தடுப்பூசியை இலங்கைக்கு தருவிப்பது, எவ்வளவு கொண்டுவருவது, எந்த வயது கட்டமைப்பினருக்கு முதலில் பயன்படுத்துவது என்பன தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரிக்கும் நாட்டு மக்களுக்கு அறிவிக்ககூடிதாக இருக்கும்.” – என்றார்.
