நாட்டில் இணையவழியூடான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகளால் 30 – 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு இணையவழி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கணனி குற்ற விசாரணைப்பிரிவு தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதோடு , அவை தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு இரு பிரத்தியேக மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஆண்டு மார்ச்சில் கணனி குற்ற விசாரணைப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த பிரிவிற்கு கடந்த ஆண்டில் மாத்திரம் 2500 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன, எனினும் தற்போது நிலைமை அதனை விட அதிகரித்துள்ளது.
நாளாந்தம் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன, இலங்கையில் இடம்பெறும் இணைய குற்றங்களில் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பெண்களின் புகைப்படங்களில் அவர்களின் முகத்தோடு வேறு நிர்வாண உடல் புகைப்படத்தினை இணைத்து இணையத்தில் வெளியிடுகின்றமை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
