“ வரலாற்றில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட்ட நாடுதான் எமது நாடு. எனவே, இலங்கை ஒருபோதும் இந்தியாவின் பிராந்தியம் ஆகாது. அதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ளார் எனக் கூறப்படும் கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இலங்கை என்பது இறைமையுள்ள சுயாதீன நாடாகும். நமது நாடு ஒருபோதும் இந்தியாவின் பிராந்தியமாகாது. அவ்வாறு செய்வதற்கு எவரேனும் முற்பட்டால் அதற்கு இடமளிக்கமாட்டோம்.
வரலாற்றில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட்ட நாடுதான் எமது நாடு. பொலன்னறுவை, அநுராதபுர யுகங்களின்போது இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக எமது மன்னர்கள் சமரிட்டுள்ளனர்.
ஹரின் பெர்ணான்டோ எமது கட்சி உறுப்பினர் அல்லர். அவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர். அவர் வெளியிடும் கருத்து தொடர்பில் நாம் கணக்கில் எடுப்பதில்லை. அவ்வாறான நபர்களிடம் காத்திரமான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது.” – என்றார்.










