இவ்வருடத்துக்குள் மாகாண தேர்தல் – எதிரணி வலியுறுத்து!

இவ்வருடத்துக்குள் கட்டாயம் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிரணி பிரதம கொறடாவான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படும். எனவே, எமது நாட்டிலும் இவ்வருடத்தில் மாகாணசபை அல்லது உள்ளாட்சிமன்றத் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களின் நிலைப்பாட்டை அறிய இதுவே சிறந்த வழி.

தேர்தலை சந்திக்க தயார் என பஸில் ராஜபக்ச அறிவிப்பு விடுக்கின்றார். ஆனால் திருட்டுத்தனமாக தேர்தலை ஒத்திவைக்கின்றனர். தேர்தலொன்று நடத்தப்படுமானால் இந்த அரசு மண்கவ்வும். எனவே, இவ்வாண்டில் கட்டாயம் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles