” எமது உரிமையை வென்றெடுப்பதற்காகவே சட்ட நடவடிக்கையில் இறங்கினோம். இதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கும், எமக்கும் இடையிலான உறவு முறியாது.”- என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரின்றி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை தாக்கல் செய்திருந்த ரவூப் ஹக்கீம், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகiயில் கூறியவை வருமாறு,
” ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெறும் தேசியப் பட்டியலில் ஒன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.
எமக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. எனவேதான் மாவட்ட நீதிமன்றத்தை நாடி, இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளோம். இதன்படி எமது செயலாளரின் பெயர் இன்றி தேசியப்பட்டியலை வெளியிடமுடியாது.
இந்த நடவடிக்கைமூலம் ஐக்கிய மக்கள் சக்திக்கும், எமக்கும் உள்ள தொடர்பு முறியாது. எமது உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவே நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்தோம். விரைவில் தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்றார் ஹக்கீம்.
