10 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா, ஆமதாபாத்தில் இன்று ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் 13-வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்பு இந்தியாவில் 3 முறை உலகக் கோப்பை போட்டி நடந்தாலும் அவற்றை இந்தியா ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து தான் நடத்தியது.
முதல் முறையாக இப்போது இந்தியா தனியாக இந்த போட்டியை நடத்துவது தனித்துவம் வாய்ந்ததாகும்.
நவம்பர் 19 ஆம் திகதிவரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.










